Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 3

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 
பகுதி -3 பகுதி -2 பகுதி -1

குழந்தைக்கு தேவையான சொட்டு மருந்துகள்?
தாய்ப்பாலே மிகச் சிறந்த சத்து மருந்து என்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு எந்த சொட்டு மருந்தும், டானிக்கும் தேவையில்லை. காய்ச்சல் போன்ற நோய் வந்தால் அப்போதைக்கு மருத்துவர் உரிய மருந்து தருவார்.
குறை மாதத்திலோ அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தை என்றாலோ இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். அதனால் எலும்புகள் வலுவடைய வைட்டமின் டி மருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.
மல்டி வைட்டமின் மருந்து, செரிமான மருந்து ஆகியவை குழந்தைக்கு தேவையில்லை.
இரும்புச்சத்து குறைவால் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட்டால் வெல்லம், பனைவெல்லம், கீரை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதும்.

தடுப்பூசிகளை எந்தெந்த காலகட்டத்தில் போட வேண்டும்?
2 வயதுவரை குழந்தைகளுக்கு சுமார் 15 தடுப்பூசிகள் வரை போட வேண்டியது கட்டாயம். இதில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் ஆறு அல்லது ஏழு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்.

குழந்தையின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு எல்லா தடுப்பூசிகளையும் போட்டால் நோய்களைத் தடுக்கலாம். உடல்நலனை விட மிகப் பெரிய சொத்து குழந்தைக்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை கொடுக்க வேண்டியது கட்டாயம். தற்போது குழந்தை எங்கு பிறந்தாலும் அரசு/தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளைப் போட்ட பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வழக்கம்.

குழந்தை பிறந்த ஆறு, பத்து, பதினாறாம் வாரங்களில் டிபிடி முத்தடுப்பு ஊசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, மூளைக்காய்ச்சலைத் தடுக்கும் ஊசி என ஐந்து தடுப்பூசியாக பென்டாவேலன்ட் தடுப்பூசி போடுவது அவசியம். இதனுடன் போலியோ சொட்டு மருந்தும் போட வேண்டும். இதை அரசு / தனியார் மருத்துவமனைகளில் போடுவது வழக்கம்.

9-வது மாதத்தில் தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மையை தடுக்கும் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
14 மாதங்களில் சின்னம்மை தடுப்பூசியும், 15 மாதங்களில் எம்.எம்.ஆர் தடுப்பூசியும் போட வேண்டும்.

ஒன்றரை வயதில் டிபிடி பூஸ்டர், போலியோ பூஸ்டர் தரப்பட வேண்டும்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது.ரோட்டா வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தடுப்பு சொட்டு மருந்து, குழந்தைக்கு 6, 10, 14 வாரங்கள் முடிந்ததும் மொத்தம் மூன்று தவணைகள் அதை வாய் வழி திரவமாக எடுத்துக்கொள்ளலாம்.

2 வயது முடியும்போது டைபாய்டு தடுப்பூசி போடுவது அவசியம். இந்த தடுப்பூசியில் 2 வகை உள்ளது. முதலாம் வகை தடுப்பூசிக்கு 150 ரூபாய் மட்டும் செலவாகும். இதை அடுத்தடுத்த 3 வருடங்களுக்கு ஒருமுறை போட வேண்டும்.

இரண்டாம் வகை தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 25 வயது வரைக்கும் பாதுகாப்பை தேடிக் கொடுக்கும்.

பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் இருந்தால் அரசு நோய் கண்டறிந்த மாவட்டங்களைப் பட்டியலிடும். அப்போது மட்டும் போட்டுக்கொள்ளலாம். வைரஸ் கிருமியின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியும் மாறுபடுவதால் அந்த சூழலில் தடுப்பூசி போடுவதே சிறந்தது.
ஒரு வகை தீவிர மூளைக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு இருந்தால், அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

ஐந்தரை வயதிலிருந்து ஆறு வயதுக்குள் டிபிடி பூஸ்டர், டிடி பூஸ்டர், எம்.எம்.ஆர் தடுப்பூசி ( 2-வது முறை) சின்னம்மை தடுப்பூசி போட வேண்டும்.

10 வயதில் டிடி தடுப்பூசி, விடுபட்டிருந்தால் டைபாய்டு தடுப்பூசி, எம்.எம்.ஆர் மற்றும் சின்னம்மை தடுப்பூசி, மஞ்சள்காமாலை ஏ தடுப்பூசி விடுபட்டிருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.

10 வயதுக்கும் மேலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை 10 வயது, அதற்கடுத்த 2 மாதங்கள், அதற்கடுத்த ஆறு மாதங்கள் என மூன்று முறை போட்டுக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கான விலை ரூ.2300. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் பெண்களுக்கு பிறகாலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இதே தடுப்பூசியால் ஆண்களுக்கு பெனிஸ் கேன்சர் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தடுப்பூசி வெளிநாட்டில் வளரிளம் பருவ ஆண்களுக்கு போடப்படுகிறது.

16- 18 வயதில் டிடி தடுப்பூசியை போடுவது அவசியம். இதனால் சின்ன சின்ன ரத்த காயங்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது பிளேடால் கீறியதால் ஏற்படும் காயம், பென்சில் சீவியதால் ஏற்பட்ட காயம் போன்றவற்றுக்கு எந்த தடுப்பூசியும் தேவைப்படாது என்றார் டாக்டர் என்.கங்கா.

தற்போது, தமிழகத்தில் உள்ள 64% பெற்றோர்கள் மட்டுமே குழந்தைக்கான கூடுதல் உணவை சரியாக தருகிறார்கள். இது தேசிய அளவில் 51% தான். (RSOC 2013-14)
ஒரு குழந்தையின் தேவைகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். 6 முதல் எட்டு மாத குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 600 கலோரிகள் தேவைப்படும். 9 முதல் 11 வரையான மாதங்களில் ஒரு நாளுக்கு 700 கலோரிகளும் 12 முதல் 23 மாதங்கள் நிறைவு பெற்ற குழந்தைகளுக்கு 900 கலோரிகள் தினமும் தேவைப்படும்.
பொதுவாகத் தடுப்பூசிகளைச் சரியான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதால் 8 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும். தற்போது இன்னும் சில தடுப்பு மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் போலியோ, காசநோய், தட்டம்மை, டிப்தீரியா, கக்குவான், டெடனஸ், ஹெபாடிடிஸ்-பி, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா, மூளைக் காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு, நிமோனியா, மெனிஞிடிஸ், ஓடிடிஎஸ், காது தொற்று ஆகிய 14 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும்.
ஒரே தடுப்பூசியில் பலவிதமான நோய்களுக்கான மருந்துக் கூறுகளை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில் இருந்து குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நிவாரணம் ஏற்படும்.
இந்தியா முழுவதும் அதிக நோய்த் தொற்று ஆபத்து நிறைந்ததாக கருதப்படும் 297 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்திரா தனுஷ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி : ஹிந்து - தமிழ் 
தொகுப்பு: பாபு நடேசன்

No comments:

Post a Comment